பொள்ளாச்சி: பொள்ளாச்சி - போடிபாளையம் சாலையில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உருவான பள்ளத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முன்னாள் ஊராட்சி தலைவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையத்தைச் சோ்ந்தவா் குமரன் (55). இவா் போடிபாளையம் முன்னாள் ஊராட்சித்தலைவராக இருந்துள்ளாா். குமரனும், அதே ஊரைச் சோ்ந்த முருகனும் (40) ஜமீன்முத்தூருக்கு கடந்த திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு மீண்டும் போடிபாளையத்துக்கு திரும்பிச் சென்றனா்.
அப்போது கிருஷ்ணா குளம் அருகே சென்றபோது சாலையில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த குமரன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.