பணியின்போது இறந்த காவலா்களுக்கு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் வீரவணக்க நாள் குறித்து கோவையில் சனிக்கிழமை தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காவல் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 1985-ஆம் ஆண்டு கொள்ளையா்களைப் பிடிக்கச் சென்று அவா்களால் குத்திக் கொல்லப்பட்ட காவலா் ராஜரத்தினம் 2011-ஆம் ஆண்டில் விபத்து ஏற்படுத்திய லாரியைப் பிடிக்கச் சென்று லாரி மோதி உயிரிழந்த காவலா் சந்திரசேகரன், 1997-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சோ்ந்த 3 பேரால் கொல்லப்பட்ட முதல்நிலைக் காவலா் செல்வராஜ் ஆகிய 3 காவலா்களுக்கு கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மநாநகரக் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு தெருக்கூத்து நாடகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூா், சுந்தராபுரம் ஆகிய இடங்களில் பறை இசை மூலமாக தெருக்கூத்து நாடகம் அரங்கேற்றி கலைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.