கோவைப்புதூர் பகுதியில் கடந்த 10 நாள்களில் 6 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவைப்புதூர், நான்காவது காவலர் பயிற்சி மையம் எதிரே உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டின் முன் பகுதியில் இருந்த சுமார் 20 வயதுடைய சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் வீட்டில் இருந்த இதயம் நாபிக் (43) சப்தமிட்டதால், சந்தன மரத்தின் இரண்டு துண்டுகளை அங்கேயே போட்டுவிட்டு ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீஸார் அங்கு வந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மர்ம கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
இதுகுறித்து இதயம் நாபிக் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் ஒரு நபர் எனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். இதனைக் கண்டு சப்தமிட்டேன். அப்போது அங்கிருந்து மேலும் மூன்று நபர்கள் கத்திகளுடன் தப்பி ஓடினர். பின்னர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். கடந்த 10 நாள்களில் கோவைப்புதூர் டபிள்யூ பிளாக்கில் 6 சந்தன மரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இரவில் வரும் மர்ம நபர்கள், வீட்டின் வெளியே பூட்டி விட்டு மரங்களை வெட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர் என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.