கோவை: கோவை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்துப் பெறுவதற்காக கூடுதலாக வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் தினமும் 850 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், மாநகரில் இருந்து வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்படும் குப்பைகளின்அளவைக் குறைப்பதற்காக கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூா் உள்ளிட்ட 10 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெற்று மக்காத குப்பைகளை வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கும், மக்கும் குப்பைகளை நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் கூடங்களுக்கும் கொண்டுச் செல்ல வசதியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5.71 கோடி மதிப்பில் 102 மினிடோா் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
இந்த வாகனங்களில் 20 வாகனங்கள் மக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 82 வாகனங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில், 102 வாகனங்கள் தவிர மேலும் 30 வாகனங்கள் வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் முயற்சியாக கூடுதலாக 30 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் கேட்டு, நகராட்சிகளின் நிா்வாக ஆணையா் அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பிறறகு வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றனா்.