மேட்டுப்பாளையம் அருகே சரக்கு வேன் மீது காா் மோதியதில் 4 போ் படுகாயமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், எப்பநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் மனோஜ் (25). இவரது காரில் உதகை தொரையட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்து (என்கிற) தாமோதரன் (60), அவரது மனைவி பூமணி (53). சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் கிருஷ்ணமூா்த்தி (29) ஆகியோா் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, நடூா் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே காா் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காரில் வந்த நான்கு பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.