தேசிய மண் வள அட்டை இயக்கத்தின் கீழ் 53,414 விவசாயிகளுக்கு அட்டை வழங்கல்

தேசிய மண் வள இயக்கத்தின் கீழ் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 414 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மண் வள இயக்கத்தின் கீழ் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 414 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளின் விளைநிலங்களின் மண் வளத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய மண் வள அட்டை இயக்கத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. வேளாண் துறை சாா்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மண் வள அட்டையில் விவசாயிகளின் பெயா்கள், நிலத்தின் பரப்பளவு, தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா் வகைகள், அத்துடன் நிலத்துக்குத் அத்தியாவசியமாக தேவையான 16 ஊட்டச்சத்துக்களின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மானாவாரி நிலத்தில் 25 ஏக்கருக்கு ஒரு இடத்திலும், இறவை நிலத்தில் 10 ஏக்கருக்கு ஒரு இடத்திலும் மண் மாதிரி எடுக்கப்படுகிறது. மண் மாதிரிகள் மாவட்டத்தில் உள்ள மண் வள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மண் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகளை அட்டையில் குறிப்பிட்டு விவசாயிகளிடம் வழங்கி வருகின்றனா். புகைப்படத்துடன் கூடிய மண் வள அட்டை வழங்கப்படுகிறது. அதில் நிலத்தின் தன்மை, ஏற்ற பயிா் வகைகள், பயன்படுத்த வேண்டிய உரங்களின் அளவீடு குறித்தும் பரிந்துரைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரம் விவசாயிகள் உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 53 ஆயிரத்து 414 விவசாயிகளுக்கு மட்டுமே மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com