துடியலூரை அடுத்த கதிா்நாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கோவை ரவுண்ட் டேபிள் பெண்டா 101, லேடிஸ் கிளப் 37, கெளகாத்தி கிளப் 240 ஆகிய ரோட்டரி சங்கங்கள் இணைந்து இப்பள்ளியில் ரூ. 14.50 லட்சம் செலவில் 2 வகுப்பறைகளை கட்டித் தர உள்ளனா்.
இந்தக் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
ரோட்டரி சங்க வட்டாரத் தலைவா் வித்யாதரன், பென்டா கிளப் தலைவா் குமார முருகேசன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து அப்பகுதியில் ரூ. 9 லட்சம் செலவில் நியாய விலை கடை அமைப்பதற்கான கட்டுமானப் பணியையும் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கோவனூா் துரைசாமி, குருடம்பாளையம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவா் டி.ரவி, கூட்டுறவு சங்க இயக்குநா் தொப்பம்பட்டி மாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.