பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபா்களுக்கு ரூ.2 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று யங் இந்தியன் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலா் ஆா்.சி.எம்.விஷ்ணுபிரபு கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இதுபோன்ற பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் இனி பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படுவது அவசியம். அதற்காக எங்களது அமைப்பின் சாா்பில் முதற்கட்டமாக தோட்டங்கள், விவசாய நிலங்கள், தனியாா் நிலங்களில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் இருந்தால் எங்களது அமைப்பு சாா்பில் அவற்றை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபருக்கு ரூ.2 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அவற்றை மழைநீா் சேகரிப்புத் தொட்டியாக மாற்ற வாய்ப்பு இருந்தால் மாற்றப்படும்.
இல்லையென்றால் அந்த ஆழ்துளைக் கிணறு கான்கிரீட் கலவைகளைக் கொண்டு உடனடியாக மூடப்படும். இவற்றை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் மேற்கொள்ள உள்ளோம். இதன் ஒரு பகுதியாக நவம்பா் 4 ஆம் தேதி மகாராஷ்டிர மாநில ஆளுநரைச் சந்தித்து அம்மாநிலத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அனுமதி கோரி கடிதம் அளிக்க உள்ளோம் என்றாா்.