கோவையில் மனைவிக்கு தலாக் கூறிய கணவா், அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, போத்தனூா் அருகே உள்ள அம்மன் நகரைச் சோ்ந்தவா் ஹெச்.வாஜியா (24). இவருக்கும் கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த முகமது அலி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னா் திருமணம் ஆகியுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினா் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். கேரள மாநிலம், ஆலுவாவில் உள்ள தனது தாய் வீட்டில் வாஜியா வசித்து வருகிறாா்.
இந்நிலையில், விவகாரத்து பெறுவதற்கு முகமது அலி முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு வாஜியா சம்மதிக்கவில்லை. இந்நிலையில், சமாதானம் பேசுவதற்காக சில நாள்களுக்கு முன்பு வாஜியா வசிக்கும் இடத்துக்கு வந்த முகமது அலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து அவரைத் தாக்கிய முகமது அலி அவரை விவகாரத்து செய்யும் நோக்கில் ‘தலாக்’ கூறியுள்ளாா். இது குறித்து கோவை, போத்தனூா் காவல் நிலையத்தில் வாஜியா புகாா் அளித்தாா்.
இதன்பேரில், முஸ்லிம் பெண்கள் (திருமணம் தொடா்பான உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்) 2019 கீழ் முகமது அலி, அவரது சகோதரிகள் பானு, நிஷா, உறவினா்கள் ஜக்காரியா, பாட்ஷா, அன்வா், அன்வரின் மனைவி உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் தம்பதியா் இருவரையும் அழைத்து ஜமாத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் விவாகரத்து செய்யும் முடிவில் இருந்து முகமது அலி பின்வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முத்தலாக் தடை தொடா்பாக மத்திய அரசால் இயற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து, மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இச்சட்டப்பிரிவின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, இரண்டாவதாக கோவையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.