மேட்டுப்பாளையம் அருகே காரமடை மேம்பாலம் சர்வீஸ் சாலை அமைக்கும் முன் திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரயில்வே மேம்பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 550 மீட்டர் தூரத்துக்கு ரூ. 41.67 கோடி மதிப்பில் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதனால் கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காரமடையில் இருந்து குறுகிய சாலையான கண்ணார்பாளையம், மத்தம்பாளையம் வழியாக கோவை சாலைக்கு திருப்பிவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பாலம் திறக்கப்பட்டு கனரக வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டது. பாலத்தின் பணிகள் முழு அளவில் முடிந்து திறக்கப்பட்டாலும் பாலத்தை ஒட்டி சர்வீஸ் சாலை மட்டும் அமைக்கவில்லை.
இந்நிலையில் காரமடை பேருந்து நிலையத்தில் இருந்து மேம்பாலம் செல்லும் வரை கடுமையான போக்குவரத்து நிலவி வருகிறது. இதனால் சுமார் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே காரமடை பேருந்து நிலையத்தில் இருந்து கண்ணார்பாளையம் பிரிவு செல்லும் இடத்தில் போக்குவரத்து போலீஸார் ஒருவரை பாலத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.