திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை மீறினால், பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்த சட்டத்தின்படி மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக மதுபோதையில் வரும் வாகன ஓட்டுநரைத் தவிர மற்ற வகை சாலை போக்குவரத்து விதிமீறல்களுக்கு காவல் துறையினரே அபராதம் விதித்து வருகின்றனர்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், கோவை, காட்டூர், சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 5 பேர் வெள்ளிக்கிழமை சிக்கினர். இவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதத் தொகை நீதிமன்றம் மூலமாக விதிக்கப்பட்டுள்ளது.