கோவை, ஈச்சனாரி அருகே இரு சக்கர வாகனத்தை திருடி கேரளத்தில் விற்க முயன்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி (46). இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில், ஈச்சனாரி - செட்டிபாளையம் சந்திப்பில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் பாலுசாமி அளித்த புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், கேரள மாநிலம், கொழிஞ்சாபாறையைச் சேர்ந்த ஷாஜகான் (22) என்பவரை இரு சக்கர வாகனத்தை திருடி விற்க முயன்றதாக அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.
இவர் கோவையில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்து கேரளத்தில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போத்தனூர் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.