மேட்டுப்பாளையம் அருகே கண்ணார்பாளையம் தோப்புத் தோட்டம் மகா கணபதி, அண்ணமார் சுவாமி, கருப்பண்ண சுவாமி , மாயவன் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செவ்வாய்கிழமை காலை கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பவானி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வருதல், முளைப்பாரி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, பிரதிஷ்டை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிறுமுகை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி நரசிம்மசாமி குழுவினர் சார்பில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு சிக்கதாசம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். திருக்கோயில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சின்னவன், கதிர்ராஜ், சேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.