வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து சூலூர் போலீஸார் கூறியதாவது:
சூலூர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (49). இவரது மனைவி அஜிதா. இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அஜிதாவிடம் சென்று முகவரி கேட்பதுபோல் நடித்து அவரிடமிருந்து நகையைப் பறிக்க முயன்றனர்.
இதையடுத்து, அஜிதா சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் நகை பறிக்க முயன்ற ஒருவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய மற்றொருவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், தப்பியோடிய நபரை சூலூர் அருகே வாகனச் சோதனையின்போது, போலீஸார் பிடித்தனர். விசாரணையில், இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன் (30), மாதவன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.