கோவை, செட்டிபாளையம் அருகே வழக்குரைஞர் வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை, செட்டிபாளையம் அருகே சங்கமம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் நிஜு வர்க்கீஸ் (35). இவர் கடந்த சனிக்கிழமை திருமண நிகழ்ச்சிக்காக கேரள மாநிலம், மூணாறு சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வர்க்கீஸிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நான்கரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வர்க்கீஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.