கோவை, உக்கடம் அருகே குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்புப் பண்ணை அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கடந்த 25 நாள்களாக குடிநீர் வராததைக் கண்டித்தும், முறையான சுகாதார வசதிகள் கோரியும் அக்குடியிருப்பில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் காலிக்குடங்களுடன் வந்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தால், உக்கடம் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த உக்கடம் போலீஸார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் பேசுவதாகத் தெரிவித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.