போத்தனூர் அருகில் கணவன் மனைவி சண்டையை தடுக்க முயன்றபோது தாக்கப்பட்ட முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கோவை, வெள்ளலூர் கோணவாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (64). கட்டட வேலை பார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரித்து சென்றுவிட்டனர். இதனால் முருகேசன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது வீட்டின் அருகில் குடியிருக்கும் முருகன் (60), அவரது மனைவி பூங்கொடி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது முருகேசன் சென்று இருவரையும் சமாதானம் செய்வார். முருகன், பூங்கொடி இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பூங்கொடியை முருகன் தாக்க முயன்றபோது முருகேசன் தடுத்துள்ளார். அப்போது முருகேசனும் தாக்கப்பட்டார்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசன் புதன்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.