பிரேஸில் பல்கலை.யுடன் பாரதியார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆராய்ச்சி, கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பிரேஸிலின் மேட்டோ க்ரோசோ ஃபெடரல் பல்கலைக்கழகத்துடன் பாரதியார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பயன்பாடு சார்ந்த உயர் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகம், பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையும், ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன. கல்வி, ஆராய்ச்சி தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்துதல், அறிவுசார் ஒத்துழைப்பு, தொலைநோக்குத் திட்டங்களுடன் புதிய ஆய்வியல் கருத்துகளை உருவாக்குதல், இரு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வாய்ப்பை ஏற்படுத்தும்.
பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் த.பரிமேலழகன், ஃபெடரல் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் டொமிங்கோஸ் தபஜாரா டி ஒலிவேரா மார்டின்ஸ் ஆகியோரது முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) க.முருகன், மேட்டோ க்ரோசோ ஃபெடரல் பல்கலைக்கழக உயிரி மருத்துவப் புல ஒருங்கிணைப்பாளர் அமில்கார் சபினோ டமாசோ ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் இரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.