மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப் பாதையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மீது தாறுமாறாக சென்ற லாரி மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி குன்னூர் சாலை வழியாக கோத்தகிரி நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை கோத்தகிரி, கூக்கல்தொரை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஓட்டிச் சென்றார்.
அப்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப் பாதையில் 2 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து சென்றபோது, உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ரங்கராஜின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று முன்னால் சென்ற கார் மீது மோதியது.
பின்னர் லாரி நிற்காமல் மற்ற வாகனங்களை முந்தி வேகமாக சென்றது. அப்போது, எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. தொடர்ந்து நிற்காமல், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்துக்குப் பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமார், நடத்துநர், இரு சக்கர வாகனத்தில் வந்த பாலசுப்பிரமணியம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி சாலை நடுவே நின்றதால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.