கேரளத்தில் உள்ளதுபோல் கூட்டுறவு ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கவுண்டம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பிரமணியம், இணைச் செயலாளர் கே.ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.அருணாசலம் தலைமை வகித்துப் பேசியதாவது:
கூட்டுறவு சங்கங்கள் தங்களது பல்நோக்குப் பணிகளை விட்டுவிட்டு நகைக் கடன்களை வழங்குவதையை முதன்மையான பணியாகச் செய்கின்றன.
இதனால் சங்கத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் இல்லை. தற்போது, பணியாற்றுபவர்களுக்கு பணிப் பாதுகாப்பும், அங்கீகாரமும் இல்லை.
கேரளத்தில் கூட்டுறவு ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் பெற்று வருகின்றனர். மத்திய கூட்டுறவு சங்கங்களிலும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஆனால், தமிழக கூட்டுறவு ஊழியர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. எனவே, உடனடியாக தமிழக அரசு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றார். நிர்வாகக் குழு உறுப்பினர் டி.நாகராஜ் நன்றி கூறினார்.