எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் காரக்குட்டையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் காரைக்குட்டை உள்ளது. தற்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா ஆலோசனையின்பேரில், குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர் குழுவினர், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்தக் குட்டையின் கரைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து, குட்டையின் கரையில் பெயர் பலகை அமைக்கப்பட்டது. மேலும், இந்தத் கூட்டத்தில் காரைக்குட்டை பகுதியை அத்திக்கடவு-அவிநாசி திட்டம் இரண்டாவது பகுதியில் நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை விடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கீரணத்தம் பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் அத்திக்கடவு-அவிநாசி இரண்டாவது நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் இணைக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.