தமிழ்நாடு பட்டயப் பொறியாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டயப் பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.விஜயமுருகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
2018-19 ஆம் ஆண்டுக்கான பயிற்சி அலுவலர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். பதவி உயர்வு விகிதாச்சார அடிப்படையில் இல்லாமல் பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும். காலமுறை மாறுதலை தவிர்த்து கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் ஜூலை 1 ஆம் தேதியன்று பதவி உயர்வுக்கான தக்கார் பட்டியல் தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள சில மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப பதவிகள் தற்காலிக பதவிகளாக உள்ளன. இதனை நிரந்தரப் பதவிகளாக உருவாக்க அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தமிழ்நாடு பட்டயப் பொறியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வை.அழகப்பன், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர் பி.செளந்திரராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.