கோவைப்புதூர் அருகே பட்டயக்கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர்.
கோவைப்புதூர், செல்வம் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (50). பட்டயக்கணக்காளராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி.
பாலசுப்பிரமணி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது மனைவி லட்சுமி வீட்டை பூட்டி விட்டு, கணவரின் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். இருவரும் மதியம் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. குனியமுத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.