மேட்டுப்பாளையம் பொகலூர் அருகே கொல்லப்பட்டவர் வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுக்கரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.
கோவை, குட்டிகவுண்டன்பதி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (40). இவர் இரிடியம் கும்பலுடன் ஏற்பட்ட பணப் பிரச்னையால் கடந்த மார்ச் மாதம் கடத்திச் செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் பொகலூர் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த சுந்தரராஜன், முத்துவேல், ஈஸ்வரன், அருண்குமார், வசந்த், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இரிடியம் மோசடி கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான கோவை, கணபதி சாஸ்திரி நகரைச் சேர்ந்த பிரபு (37) திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சரணடைந்தார். பின் அவரை மதுக்கரையில் உள்ள குற்றவியல் 7 ஆவது நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் பிரபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க க.க.சாவடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். இதையடுத்து பிரபுவை தனி இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.