மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 6, 8, 15 ஆகிய வார்டுகளில் முறையாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 6, 8, 15 ஆவது வார்டுகளில் உள்ள அண்ணாஜிராவ் சாலை, நியூ எக்ஸ்டென்ஷன் சாலை, பள்ளிவாசல் தெரு, பழைய சந்தை கடை உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திமுக நகரச் செயலாளரும், முன்னாள் வார்டு உறுப்பினருமான முகமது யூனுஸ் தலைமையில் அன்னாஜிராவ் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துணை ஆய்வாளர் திலக், போக்குவரத்து துணை ஆய்வாளர் முரளி உள்ளிட்ட போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக போலீஸார் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.