இயற்கை சாய உற்பத்தி தொடர்பான கருத்தரங்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இயற்கை சாய உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கிற்கு, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தலைமை வகித்து பேசியதாவது:
மரங்களிலிருந்து இலை, பட்டை, விதை, காய், பூக்கள், உள்ளிட்டவைகளில் இருந்து இயற்கை சாயம் தயாரிக்கப்படுகிறது. அதிக அளவில் துணிகளுக்கும், உணவு பண்டங்களுக்கும் பயன்படுத்த செந்தூர மரத்திலிருந்து சாயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேக்கு, வெப்பாலை, தைலம், சவுக்கு, சங்கு பூ, மேரிகோல்டு, மேபிளவர், செம்பருத்தி உள்ளிட்ட 15 வகையான மரங்களிலிருந்து விதைகள் தயார் செய்யப்படுகின்றன. ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், கத்தரிப்பூ, பச்சை உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் சாயம் தயாரிக்கப்படுகிறது. இத்தொழில் மேற்கொள்ள மத்திய அரசின் சார்பில் ரூ. 2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக செந்தூர மரத்திலிருந்து ரூ.33 லட்சம் செலவில் சாய பொடி மற்றும் திரவியம் தயாரிக்க தொழில்நுட்பக் கருவிகள் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் வனக் கல்லூரி வளாகத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் சாயம் தயாரிக்க பயன்படும் மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. விவசாயிகள், மரம் மற்றும் பூ உற்பத்தி செய்வதற்கும், பராமரிப்பிற்கும் தேவையான நிதி உதவி கல்லூரி சார்பில் மானியமாக வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஜவுளித் துறையில் துணிகளுக்கு இயற்கை முறையில் சாயம் போடுவதற்காக சாய திரவியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்ய தொழில்நுட்பமும் மூலப்பொருள்களும் கிடைக்காமல் இருந்தது. தற்போது இதனை இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை வேளாண் வணிகத் துறை மற்றும் விற்பனை ஆணையர் ஜகத் சிரு சிறப்புரையாற்றினார். பின்னர் வன கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்ட புதிய தொழில்நுட்ப ஆலையை சிறப்பு விருந்தனர்கள் பார்வையிட்டனர். இந்த கருத்தரங்கில், தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள், நெசவாளர்கள், சாயப் பட்டறையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.