கோவை அருகே மதுக்கரையில் ரயில்வே தண்டவாளத்தில் இந்திய கடற்படை பயிற்சி வீரரின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
மதுக்கரை - எட்டிமடை இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின் போத்தனூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது புதுதில்லியைச் சேர்ந்த அன்கித்குமார் சர்மா (21) என்பதும் இவர் எர்ணாகுளத்தில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் பயிற்சி வீரராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும், கேரளத்தில் இருந்து அன்கித்குமார் சர்மா ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அன்கித்குமார் சர்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது.