தமிழக முதல்வர் அறிவித்த கூலி உயர்வு பல மாதங்கள் ஆகியும் வழங்கப்படாததால் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ. 5 கூலி உயர்வு அளிக்கப்படும் என பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், இந்தக் கூலி உயர்வை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தினால் மட்டுமே வழங்கப்படும் என்று ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த அதிமுக உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தினர் தயாராக உள்ள நிலையில் சில தொழிற்சங்கத்தினர் ஒப்பந்தம் ஏற்படுத்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் முதல்வர் அறிவித்த கூலி உயர்வு கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.