உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வி.ஜி.மருத்துவமனை மற்றும் வி.ஜி.செவிலியர் கல்லூரி இணைந்து துடியலூரில் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனுசாமி துவக்கி வைத்தார். வி.ஜி.மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பேரணி மேட்டுப்பாளையம் சாலை விஸ்வநாதபுரம் வழியாக துடியலூரைச் சென்றடைந்தது.
இதில் இருதய நோய் தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர்.
பேரணியில் கல்லூரி முதல்வர் ருக்குமணி, ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் வேணுகோபாலகிருஷ்னன், டாக்டர் வெங்கடேஷ், ஆஷா வெங்கடேஷ், டாக்டர் ரம்யா ஆகியோர் இருதய நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினர்.