கோவையில் தொழிலதிபர் வீட்டில் புகுந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, ராஜா அண்ணாமலைபுரம், பாரதி பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (53). இவர், அப்பகுதியில் இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 26ஆம் தேதி வீட்டின் கீழ்தளத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டின் சுவர் வழியாக ஏறிக்குதித்த கொள்ளையர்கள், நாராயணசாமி வீட்டின் முதல் மாடிக்குச் சென்று அங்கு பீரோவில்
வைக்கப்பட்டிருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தைக் திருடிக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை மாடிக்குச் சென்றபோது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பீரோ மற்றும் சுவர்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்துச் சென்றனர். போலீஸார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.