கோவை, சாடிவயல் கல்குத்திபதி அருகே சூரிய மின் வேலியில் சிக்கி சுமார் 4 வயதுடைய பெண் யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
கோவை, மதுக்கரை வனச் சரகத்துக்கு உள்பட்ட சாடிவயல் கல்குத்திபதி அருகே வனப் பகுதியை ஒட்டி பட்டிவேல் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை தங்கவேல் என்பவர் குத்தகைக்குப் பெற்று வாழை விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தத் தோட்டத்தில் இருந்த சூரிய மின் வேலி அருகில் சனிக்கிழமை அதிகாலை குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் கிடத்துள்ளது.
இதையடுத்து தோட்டத்தில் இருந்தவர்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த வனத் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:
சுமார் 4 வயதுடைய பெண் யானை சூரிய மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. வனப் பகுதியில் இருந்து தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த வாழைகளை வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளன. பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் செல்ல முற்பட்டபோது சூரிய மின் வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்திருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.