கோவையில் வட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை, ஆவாரம்பாளையம் அருகே கணபதிபுதூரைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (39). கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 26-ஆம் தேதி பணி நிமித்தமாக மகேஷ்குமார் சென்னை சென்றார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டைப் பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றனர்.
இந்நிலையில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 7 பவுன் நகைககள் மற்றும் ரூ. 40 ஆயிரத்தை திருடிச் சென்றனர். வீட்டுக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மகேஷ்குமாருக்குச் செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவை வந்த அவர், வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து சரவணம்பட்டி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் கதவுகள் மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்துச் சென்றனர். திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.