கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம்-காளப்பட்டி சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (59). இவர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந் நிலையில், பணி முடிந்து குரும்பபாளையம்-காளப்பட்டி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் பாலதண்டபாணி படுகாயம் அடைந்தார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.