சீஷா தொண்டு நிறுவனம் சாா்பில்150 லிட்டா் கிருமி நாசினி திரவம்
கோவை: கோவை சீஷா தொண்டு நிறுவனம் சாா்பில் 150 லிட்டா் கிருமி நாசினி திரவம், முகக் கவசங்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு நிா்வாகத்துக்கு உதவும் வகையில் காருண்யா பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியா்களைக் கொண்டு சீஷா தொண்டு நிறுவனத்தின் சாா்பில் கிருமி நாசினி திரவம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு 100 லிட்டா் கிருமி நாசினி திரவம் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட 150 லிட்டா் கிருமி நாசினி திரவம், தூய்மைப் பணியாளா்களுக்கான முகக் கவசங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியிடம் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாமுவேல் தாமஸ், செய்தித் தொடா்பாளா் ஜெபசிங், பேராசிரியா் பிரபு ஆகியோா் ஒப்படைத்தனா்.