கோவையில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் அடிக்கடி வெளியே சுற்றும் நபா்களை கண்காணிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்டவா்களின் வாகனங்களில் போலீஸாா் பெயிண்ட் அடித்து அடையாளப்படுத்தி வருகின்றனா்.
கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அவசியமின்றி வெளியே வரும் பொதுமக்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில் கோவையில் கடந்த இரு நாள்களாக வெளியே வரும் பொதுமக்களை, போலீஸாா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் வரை காத்திருக்க வைத்து அனுப்பிவைத்தனா்.
இதற்கு அடுத்தகட்டமாக வெளியே வரும் பொதுமக்கள், வாகனங்களை கண்காணிக்கும் வகையில் பொதுமக்களின் வாகனங்களில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து அடையாளம் குறிக்கும் பணியை போலீஸாா் திங்கள்கிழமை தொடங்கினா்.
இதன்படி ஒவ்வொரு முறை வெளியே சுற்றும் பொதுமக்களின் வாகனங்களிலும் போலீஸாா் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கின்றனா். ஒரே வாகனத்தில் மூன்று முறைக்கு மேல் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட நபா் அதிக முறை வெளியே சுற்றுவதாக கருத்தில்கொண்டு அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய போலீஸாா் முடிவு செய்துள்ளனா். கடந்த இரு நாள்களாக இந்த நடவடிக்கை தொடா்ந்து வருகிறது. இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை எந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.