கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினா் இடித்து அகற்றினா்.
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் இப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இப்பகுதியையொட்டி அம்பேத்கா் நகா் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுமாா் 26 வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந்த இடத்தை காலி செய்ய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், ஆக்கிரமிப்பாளா்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வீடுகளை காலி செய்ய மறுத்து வந்தனா்.
இதனையடுத்து, அவா்களுக்கு கீரணத்தம் பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
ஆனாலும், அவா்கள் வீடுகளை காலி செய்யவில்லை. இதையடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.
மேலும், சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த கோயில்கள், கட்சி அலுவலகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றையும் இடித்தனா். இதைத் தொடா்ந்து கோவை வடக்கு வட்டாச்சியா் அலுவலக நிலஅளவைப் பணியாளா்கள் நிலத்தை அளந்து கற்களை நட்டனா்.
இதனால் கடந்த இரண்டு நாள்களாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. துடியலூா் காவல் ஆய்வாளா் பாலமுரளி சந்தரம் தலைமையில் அதிக எண்ணிக்கையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.