வால்பாறை அடுத்த பெரிய கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஒற்றை யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஒற்றை யானை எஸ்டேட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் சங்கரலிங்கம் என்பவரது வீட்டின் சுவரை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தியது. அப்போது தனியாக இருந்த சங்கரலிங்கம் பின்பக்கம் வழியாக தப்பியுள்ளாா். தகவலறிந்து சென்ற வனத் துறையினா் யானையை அப்பகுதியை விட்டு விரட்டினா்.