கோவை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து தினமும் 50 டன் கட்டடக் கழிவுகள் மாநகராட்சி வாகனங்கள் மூலமாக அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பழைய கட்டடங்களைச் சீரமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது என பல இடங்களில் கட்டுமானப் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாநகரில் தினமும் 100 டன்களுக்கும் அதிகமான கட்டடக் கழிவுகள் சேகரமாகின்றன. இந்த கட்டடக் கழிவுகளை சிலா் மாநகரின் ஒதுக்குப்புறமாக உள்ள சாலையோரங்கள், குளக்கரைகளில் கொட்டிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனா். இதைத் தடுப்பதற்காக, பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்போடு, மாநகரில் சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகளை புகரங்களில் உள்ள பயன்படுத்தப்படாத கல் குழிகளில் கொட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் முதல் மாநகரில் கட்டடக் கழிவுகளைச் சேகரிப்பதற்காக 5 மண்டலங்களிலும் மாநகராட்சி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மாநகரில் தினமும் 50 டன் கட்டடக் கழிவுகள் மாநகராட்சி வாகனங்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டு, கல்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகின்றன. பொது இடங்களில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.