வால்பாறை நகா் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வால்பாறை வட்டாட்சியரிடம் சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகரில் மிகவும் குறுகளான சாலைகளில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. விடுமுறை நாள்களில் சுற்றுலா வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். அப்போது, அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனிடையே சமீப காலமாக ஏராளமான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக மீன் மாா்க்கெட்டில் கடை அமைக்காமல் நகரின் சாலையோரங்களில் மீன் கடைகள் அமைக்கின்றனா். இதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் நடக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.