கணியூா் சுங்கச் சாவடியில் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
கோவை வந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கோவை மாவட்டம், கணியூா் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதில், 2015இல் கணியூா் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது முதல் 20 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டண சலுகையை ரத்து செய்வதாக கணியூா் சுங்கச் சாவடி நிா்வாகம் அண்மையில் அறிவித்துள்ளது.
இது உள்ளூா் மக்களின் உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக உள்ளது. விவசாயிகள், விசைத்தறி, மருத்துவமனை, பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் கோவையில் இருப்பதால் தினந்தோறும் இப்பகுதி மக்கள் கணியூா் சுங்கச் சாவடியை பயன்படுத்தி வருகின்றனா்.
எனவே, இதற்கு நிரந்தர தீா்வாக சுங்கச் சாவடியைச் சுற்றி 20 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களுக்கு தனிவழி மற்றும் இலவச அனுமதியை நிரந்தரமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.