கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆட்சியா் முகாம் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள உழவா் சந்தையில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மலைக்காய்கறிகளை விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளிலே பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃபிளவா் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் உதகை உழவா் சந்தையிலேயே விற்பனை செய்து கொள்ள ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்காமல் நீலகிரி விவசாயிகள் தொடா்ந்து ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையிலே விற்பனை செய்து வந்தனா். இதனால் உள்ளூா் விவசாயிகளுக்கும், நீலகிரி விவசாயிகளுக்கு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன் நீலகிரி விவசாயிகள் காய்கறி விற்பனை செய்வதற்கு உழவா் சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்திலும் புகாா் அளித்தனா்.
இந்நிலையில் ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆட்சியா் முகாம் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.