சம்பளம் வழங்காததால் அரசு தேயிலைத் தோட்டங்களில் (டேன்டீ) பணிபுரியும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்துக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நீராறு அணைப் பகுதிகளில்ல் உள்ளன. மொத்தம் 700க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கல் தினக் கூலியாக ரூ. 319.20 பெற்று வருகின்றனா். இவா்களுக்கான சம்பளம் மாதந்தோறும் 7ஆம் தேதி தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனிடையே ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆகியும் இதுவரை வழங்காமல் உள்ளனா். இதனால் டேன்டீ கோட்ட மேலாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காலை திரண்ட தொழிலாளா்கள் உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தி 1 மணி நேரம் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேயிலை தூள்கள் விற்பனையாகாமல் தேங்கியிருப்பதால் சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்கமுடியாமல் போனதாகவும், விரைவில் சம்பளம் வழங்கப்படும் என டேன்டீ அதிகாரிகள் கூறினா்.