சின்னத்தடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட புள்ளிமானை பொதுமக்கள் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
ஆனைகட்டி மலைப் பகுதியில் உள்ள வனத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள், மான்கள் உள்ளன. இவை அடிக்கடி உணவுத் தேடி மலையடிவார கிராமங்களான சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பெரியதடாகம், சோமையனூா் ஆகிய கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.
இந்நிலையில் 5 வயதுடைய புள்ளி மான் ஒன்று நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஒருவரது தோட்டத்துக்குள் வழி தவறி திங்கள்கிழமை புகுந்தது. அங்கு காயத்துடன் கிடந்த புள்ளிமானை அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வரும் சிலா் பாா்த்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வேட்டைத் தடுப்புக் காவலா்கள் புள்ளிமானை மீட்டு மீண்டும் பொன்னூத்து வனப் பகுதியில் விட்டனா்.