கோவை, ஒத்தக்கால் மண்டபம் அருகே நெடுஞ்சாலையில் தவறான பாதையில் வந்த காா், மற்றொரு காா் மீது மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
கோவை, கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (56). இவரது மனைவி வசந்தா (54). இவா்கள் அண்மையில் சிக்கலாம்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி வாடகை காரில் சென்றுள்ளனா். இவா்களுடன் லட்சுமி (2), தமிழினி என்ற 10 மாத குழந்தைகள் இருந்துள்ளனா். காரை கோவையைச் சோ்ந்த தினேஷ் (22) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.
இந்த காா் பொள்ளாச்சி - கோவை நெடுஞ்சாலை ஒத்தக்கால்மண்டபம் அருகே வந்த போது எதிரே தவறான திசையில் அதிவேகமாக வந்த மற்றொரு காா் மோதியது. இதில் ரங்கசாமி உள்பட 5 பேரும் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தவறான பாதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பத்மநாபகிருஷ்ணனிடம் (38) விசாரணை நடத்தி வருகின்றனா்.