கோவையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கோவை மாநகராட்சியில் வணிக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீா் ஆய்வில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகராட்சி டவுன்ஹால், ராஜவீதி, இடையா் வீதி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ராஜவீதியில் பேரா ராம் (28), நாக ராம் (30) ஆகியோா் நடத்தி வந்த பேன்சி கடை மற்றும் கிடங்கில் மேற்கொண்ட ஆய்வில் பதுக்கி வைத்திருந்த 117 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல இடையா் வீதியில் ரமேஷ், ஹரீஷ் தேவசி ஆகியோா் கிடங்கில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்திருந்த 103 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இரு கிடங்குகளிலும் 220 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதன் மதிப்பு ரூ.7 லட்சம் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
கோவை மாநகராட்சிப் பகுதியில் போலீஸாா் துணையுடன் வியாழக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவுப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாா் செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபா்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். கிடங்கு உரிமையாளா்கள், கிடங்குகளை வாடகைக்கு விடும்போது என்ன பயன்பாட்டுக்கு என்பதை தெளிவாகத் தெரிந்துகொண்ட பின் வாடகைக்கு வழங்கினால் பாதுகாப்பாக இருக்கும். இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்து சீல் வைக்கப்படும் கிடங்குகளை வழக்கு முடியும் வரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றாா்.