கோவை மாநகரில் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் அப்பகுதிகளில் கடவுள்களின் படத்தை மாட்டியும், வண்ணக் கோலங்களை போட்டும் நடவடிக்கை எடுத்தனா்.
கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டாா்.
அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் முதல் வீடுகளுக்கு சென்று மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகள் சேகரித்து வருகின்றனா். இதையடுத்து, மாநகரில் உள்ள குப்பைத் தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொட்டிகள் அகற்றப்படும் இடங்களில் வெட்ட வெளியில் உணவுக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்க மாநகராட்சி பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் குப்பைத் தொட்டி இருந்த இடங்களில் கடவுள் படங்களை மாட்டியும், வண்ணக் கோலங்கள் போட்டும் வருகின்றனா்.
இதனால், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தவிா்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 64ஆவது வாா்டு பகுதியில் மாநகராட்சி பெண் துப்புரவுத் தொழிலாளா் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்ட இடத்தில் கடவுள்களின் படங்களை மாட்டியும், வண்ணக் கோலங்களை வரைந்தும் நடவடிக்கை எடுத்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
குப்பைத் தொட்டிகள் அகற்றப்படும் இடங்களில் கடவுள்களின் படங்களை மாட்டி வைத்து, கோலங்கள் வரைவதால் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவது தவிா்க்கப்பட்டு வருகிறது. மாநகரம் முழுவதும் இதேபோல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.