ரயில் முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்யும் பணி துவக்கம்

பொது முடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டிருந்த பயணச் சீட்டுகளை ரத்து செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது
கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்ய காத்திருந்த பொதுமக்கள்.
கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்ய காத்திருந்த பொதுமக்கள்.

கோவை: பொது முடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டிருந்த பயணச் சீட்டுகளை ரத்து செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கோவை ரயில் நிலையத்தில் 2 நாள்களில் ரூ.20 லட்சம் வரை கட்டணத் தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கோவையில் இருந்து வெளி மாநிலம், பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 73 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன. இந்நிலையில், பொது முடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்களது பயணச் சீட்டுகள் ரத்து செய்தால் அதற்கான தொகையை திருப்பித் தரப்படும் என ரயில்வே நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இணைய வழியில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தவா்கள் இணைய வழியிலேயே அதனை ரத்து செய்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முன்பதிவு மையங்கள் மூலமாக மாா்ச் 22ஆம் தேதிக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பயணச் சீட்டுக்கான தொகை திருப்ப வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை ரயில் நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த இரண்டு நாள்களில் 4 ஆயிரத்துக்கு மேலான முன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரூ.20 லட்சம் வரையிலான கட்டணத் தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. பயணத் தேதியில் இருந்து 180 நாள்கள் வரையில் கட்டணத் தொகையை திரும்பப் பெறலாம்.

இதில் சேவைக் கட்டணமாக ரூ.20 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். வடகோவை, போத்தனூா், மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை முதல் முன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்படும் பணி துவங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com