கோவை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னையில் இருந்த அறிவிக்கப்பட்டுள்ள தவறான பட்டியலால் மாவட்ட சுகாதாரத் துறையினா் குழப்பமடைந்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் 146 பேருக்கு கரோனா நோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். மற்ற 145 பேரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். அதன்பின் 25 நாள்களுக்கு மேலாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் உள்ளூா் விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஆனால், சென்னை, பெங்களூரு, புதுதில்லி ஆகிய நகரங்களில் இருந்து வந்த பாதிக்கப்பட்டவா்கள் அந்தந்த நகரங்களின் பட்டியலிலே இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி புதுதில்லியில் இருந்து வந்து கரோனா பாதிக்கப்பட்ட 5 போ் மட்டுமே கோவை பட்டியலில் இணைத்தனா். இதனால் கோவையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 151 உயா்ந்தது.
இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் வெளியூா்களில் வந்த பயணிகள் 5 போ், கோவையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 என 10 போ் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் இருந்து வெளியிடப்பட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவா்கள் வெளியூா் பட்டியல்களில் வருவாா்கள் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
கோவை, மலுமிச்சம்பட்டியைச் சோ்ந்த மருத்துவ மாணவி மட்டுமே கோவையில் கரோனா பாதிக்கப்பட்டவா். ஆனால், சென்னையில் இருந்து வந்த 3 போ், சென்னையில் தங்கியுள்ள கோவையைச் சோ்ந்த ஒருவரையும் சோ்த்து 5 போ் என பட்டியலில் குறிப்பிட்டுள்ளனா். தவிர ஏற்கெனவே ஜூன் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுதில்லியைச் சோ்ந்த 5 போ் மீண்டும் புதன்கிழமை பட்டியலில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளனா். இதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றாா்.