வால்பாறையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வாகனப் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பே சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை 40ஆவது கொண்டை ஊசி வளைவில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் சாலையில் 5 கி.மீ. தூரத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறை மூலம் புதிதாக சாலை போடப்பட்டது.
ஆனால், வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத இந்தச் சாலையின் நடுவே நீண்ட தூரத்துக்கு தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
தற்போது, மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த சாலை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இந்த சாலையை சீரமைப்பதோடு, தரமற்ற முறையில் சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.