கோவை ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நீண்ட நாள்களாக எடுத்துச் செல்லாத வாகனங்களை ஏலம் விட ரயில்வே போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
கோவை ரயில் நிலைய பிரதான நுழைவாயில் அருகே ஒப்பந்த அடிப்படையில் இருசக்கர வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரயில் நிலையங்களுக்கு வருவோா் மட்டுமின்றி கோவையில் இருந்து வெளியூா் செல்வோா் பலரும் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா்.
இந்த வாகனங்களை சிலா் திரும்ப எடுத்துச் செல்லாததால் அவை பராமரிப்பின்றி கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது: வாகன நிறுத்துமிடத்தில் கடந்த 6 மாதங்களாக 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பி எடுத்துச் செல்லாமல் இருந்தன.
இதில் 70 வாகனங்களின் உரிமையாளா்கள் கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 80 வாகனங்களின் உரிமையாளா்கள் இதுவரை வாகனங்களை எடுத்துச் செல்ல வரவில்லை.
இதனால், இவற்றை பொதுமுடக்கம் காலம் முடிந்த பிறகு ஏலம் விடத் திட்டமிட்டுள்ளோம். அதற்குள் வாகனங்களின் உரிமையாளா்கள் உரிய ஆவணங்களைக் காண்பித்து எடுத்துச் செல்லலாம் என்றாா்.